சதுரங்கவேட்டை பாணியில் ஆசையைத் தூண்டி நூதன மோசடி…! கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி…!!

Author: kavin kumar
27 January 2022, 9:40 pm

சேலத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ரூபாய் 4 கோடி மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ்-லலிதா. இந்த தம்பதி சேலம் ராஜகணபதி கோவில் அருகே லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர்கள் பொதுமக்களிடம் நகை சீட்டு நடத்தி வந்ததாகவும், ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதா மாதம் ரூபாய் 3 ஆயிரம் வட்டியும், 6 பவுன் தங்க நகை டெபாசிட் செய்தால் அதற்கு வட்டியாக மாதம் ரூபாய் 2500 வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பி சேலம் டவுன் மற்றும் பொன்னம்மாப்பேட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்களிடம் நகைச்சீட்டில் சேர்ந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நகைச்சீட்டு சேர்ந்தவர்களுக்கு பணம் திருப்பித் தராமல், சிலருக்கு வட்டித் தொகை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் இன்று நகை கடை திறக்கப்படவில்லை. கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்படும் என கடையின் முன்பு எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்கராஜன் வீட்டிற்கு சென்ற பார்ததபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் தங்கராஜ் பொன்னம்மாபேட்டை அருகேயுள்ள அவரது மாமனார் வீட்டில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறத்து தகவலறிற்து வந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தங்கராஜ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகை கடையை காலி செய்துகொண்டு பொருட்களை காரில் ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகள் இடம் வழங்கியுள்ளனர்.இந்த வீடியோவில் தங்கராஜ் மற்றும் கடை ஊழியர்கள் நகை கடையில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டு சென்றது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தங்கராஜும் அவரது மனைவி லலிதாவும் நகைச்சீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து தங்கராஜ் சீட்டு நடத்தியதிலும், நகைகள் வாங்கியதிலும் ரூபாய் 4 கோடி வரை மோசடியில் ஈடுப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி மீது பொதுமக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?