மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன் : 5 நாட்களாக லாட்ஜில் ரூம் எடுத்து கொண்டாட்டம்…

Author: kavin kumar
5 February 2022, 7:25 pm

தேனி : வருசநாடு அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ஊர் சுற்றிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தனிபாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன் (58), அம்சகொடி (50) தம்பதியினர். கணேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணேசன் தனது மனைவி அம்சகொடியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும் தகராறு முற்றிய நிலையில், கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அம்சகொடியை வெட்டியுள்ளார். இதில் அம்சகொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அம்சகொடியை கொலை செய்தது அக்கம்பக்கத்தினருக்கு தெரியமால் இருக்க உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அருகேயுள்ள குமனந்தொழு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி மது அருந்திவிட்டு 5 நாட்களாக ஊர் சுற்றியுள்ளார்.

இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த கணேசன் அம்சகொடியின் அழுகிய உடலை இழுத்துச் சென்று வீட்டின் வெளியே இருந்த கோழிக் கூண்டில் அடைத்து வைத்துள்ளார். அழுகிய உடலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த அம்சகொடியின் உடலை மீட்டனர். மேலும் குடிபோதையில் சுற்றிக் கொண்டிருந்த கணேசனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?