விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி… நாகையில் திடுக் சம்பவம்… வேளாங்கண்ணி போலீசார் விசாரணை
Author: Babu Lakshmanan14 March 2022, 6:07 pm
நாகை அருகே மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த விவசாயி ; உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள சின்னத்தும்பூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலமழை வடக்கு தெருவைச் சேர்ந்த லெனின் (42). இவர் தனது வயலில் சாகுபடி செய்துள்ள நெல் அறுவடை பணிக்காக அறுவடை இயந்திரத்தை அழைத்து வருவதாக கூறி வீட்டிலிருந்து நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வயலில், இரண்டு கால்களிலும் சிராய்ப்பு காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விவசாயி உயிரிழந்தது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தவருக்கு வேம்பு என்ற மனைவியும், பிரகதீஸ்வரன், ஜனனி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.