புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை: இன்றும் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம்..!!

Author: Rajesh
3 April 2022, 8:27 am

சென்னை: கடந்த 12 நாட்களில் பெட்ரோல் ரூ.7.56, டீசல் ரூ.7.61 அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் கடந்த மார்ச் 22ம் தேதி அதிகரித்தது. அதன்படி, கடந்த 22ம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது. இதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களும் எரிபொருள் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.96க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.99.04க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் ரூ.7.56, டீசல் ரூ.7.61 அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலையேறிவருவதால், அத்தியாவாசிய பொருட்களின் விலையும் தங்களின் பயண செலவும் ஒருசேர அதிகரிப்பதாக மக்கள் வேதனையுடன் கூறி வருவதை பார்க்க முடிந்தது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!