கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவான இருவர்.. துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் : தனிப்படைகள் அமைத்து தேடும் சிபிசிஐடி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 1:07 pm

கோவை : தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்ததோடு, 200க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி உட்பட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்கிற முஜி மற்றும் சாதிக் (எ) ராஜா (எ) டெய்லர் ராஜா (எ) வளர்ந்த ராஜா ஆகிய இருவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.

இவர்கள் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது அவர்களை பிடிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு, கோவை, திருச்சி, மதுரை என மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு சிறப்பு படை என 3 தனிப்படைகளை அமைத்துள்ளது.

ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்னாடகாவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இம்மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டியும் விசாரணை நடத்த தனிப்படைகள் முடிவு செய்துள்ளன. இவர்கள் இருவர் குறித்து தகவல் அளித்தால் தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?