கோவையில் தேசிய அளவிலான செஸ் போட்டி : வரும் 18ம் தேதி துவக்கம்…. ரூ.9 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2022, 8:09 pm
கோவை : தேசிய அளவிலான, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான எம்.பி.எல் 31 வது, சதுரங்க போட்டிகள், பொள்ளாச்சியில் வரும் 18 ம்தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது,
கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள சக்திசுகர்ஸ் அலுவலகத்தில் இன்று, தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு அமைப்பின் தலைவர் மாணிக்கம், மற்றும், போட்டி ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: சக்தி குழும நிறுவனங்களில் நிறுவனத் தலைவர் நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியும், கோவை மாவட்ட சதுரங்க சங்கமும், இணைந்து தேசிய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான எம்பிஎல், சதுரங்க சாம்பியன் போட்டியை நடத்துகிறது.
வரும் 18-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் 22 மாநிலங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் என 235 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 90 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், வழங்கபட உள்ளது. மொத்தமாக ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கபட உள்ளது.
மேலும் சிறப்பாக விளையாடும், 3 வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகள், வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் உலக 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.