அரை நிர்வாணப்படுத்தி ரத்தம் வரும் வரை கயிற்றில் கட்டி நபரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் : அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2022, 4:31 pm
திண்டுக்கல் : ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தனது நண்பர்களுடன் பொதுமக்கள் ஒருவரை கயிற்றில் கட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மலை பகுதியில் உள்ளது மன்னமனூர் ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் விவசாயத்தையும் மற்றும் விவசாய கூலித்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சி தலைவர் மகனுக்கும் கூக்கால் பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இதையடுத்து ஊராட்சி தலைவரின் மகன் கார்த்தி மற்றும் அவரது உறவினரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூக்கால் பகுதிக்குச் சென்று கூக்கால் பகுதியை சேர்ந்தவதை வழிமறித்து கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் அனைவர் முன்னிலையிலும் கொடூர தாக்குதல் நடைபெற்ற போது பொதுமக்கள் அவர்களை தடுக்க முயன்றபோது கற்களை வீசியுள்ளனர்.
மேலும் பொதுமக்களையும் மிரட்டியும் செல்போனில் படம் எடுத்தவர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி அவர்களை தாக்க முயன்றதால் பொதுமக்கள் யாரும் அருகில் செல்லவில்லை.
தற்போது காயமடைந்தவர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்கள் மீது கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.