மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தும் பணி நிறைவு: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
Author: Rajesh14 May 2022, 8:31 am
சென்னை: மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் 20,304 பேருந்துகள் 10,417 வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பொது போக்குவரத்தை ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். மேலும், பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2,500 மாநகரப்பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
அதேபோல அவசர கால எச்சரிக்கை பட்டனும் பேருந்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், மாநகர பேருந்துகளில் சிசிடிவி பயன்பாடு இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.