நடிகர் அஜித்தின் PRO மீது போலீஸில் புகார்… அப்படி என்ன ஆச்சு..? பரபரப்பில் திரையுலகம்..!!
Author: Babu Lakshmanan8 June 2022, 2:03 pm
நடிகர் அஜித்குமாரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் பிஆர்ஓ-வாக இருப்பவர் சுரேஷ் சந்திரா. சென்னையில் இவர் நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், சென்னையில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது, செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியதாகவும், நிருபர் ஒருவரின் மீது கை வைத்து தள்ளியதாகவும் சுரேஷ் சந்திரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், சினிமா பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா & உதவியாளர்கள் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
முன்னதாக, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நேற்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் திரு.ரா.ஆனந்தன்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சில செய்தியாளர்கள் பேச முயற்சி செய்துள்ளனர். அப்போது செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் திரு.சுரேஷ் சந்திரா, செய்தியாளர் திரு.ஆனந்தனிடம், நீ யார் என்று ஒருமையில் கேட்டதைத் தொடர்ந்து நிறுவனம் குறித்து தகாத வார்த்தை கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மனஉளைச்சல் அடைந்த செய்தியாளர் ஆனந்தன், மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவிடம், எப்படி எங்கள் நிறுவனம் குறித்து தவறாக சொல்லலாம்? என கேள்விகள் எழுப்பியுள்ளார். இணக்கமற்ற சூழலில் சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் ,/ நண்பர்கள் குறிப்பாக நாசர் மற்றும் தியாகு ஆகியோர் செய்தியாளர் ஆனந்தன் மீது கை வைத்து தள்ளி மிரட்டியுள்ளனர்.
இந்த அத்துமீறலை – அநாகரீக மிரட்டலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஆனந்தன் இது தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொதுவாக பல இடங்களில் நிகழ்வுகளில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள், மிரட்டல்கள், அவமதிப்புகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்குஅல்ல. பத்திரிகையாளர்கள்/ஊடகவியலாளர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதும் அவர்களை சுதந்திரமாக கடமையாற்ற விடுவதுமே நல்ல சமுகத்தின் நல்லடையாளம், எனக் குறிப்பிட்டுள்ளனர்.