ஜெயலலிதா பயன்படுத்திய 27 பொருட்கள் ஏலம் : பெங்களூரு அரசு கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏலம் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan26 ஜூன் 2022, 10:20 காலை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, பெங்களூரு அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள சேலைகள், செருப்புகள், அவருக்கு அணிவிக்கப்பட்ட சால்வைகள் வீணாகும் அபாயத்தில் இருப்ப தால், ஏலம் விடும்படி சமூக ஆர்வலர் மூன்று நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், 1996 டிசம்பர் 11ல், கணக்கில் காட்டப்படாத பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், இந்த பொருட்கள், விதான் சவுதாவின் தரை தளத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பெங்களூரு ஹலசூரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ., ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆகியோரிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள்; 750 அலங்கரிக்கப்பட்ட செருப்புகள்; 250 சால்வைகள் ஆகியவை, சீக்கிரமாக சேதம் அடையும் தன்மை கொண்டவை.இந்த வழக்கில் 2017ல் தீர்ப்பு வந்தது.
தற்போது அவர் உயிருடன் இல்லை. எனவே அவற்றை தாமதப்படுத்தாமல் ஏலம் விட வேண்டும். அவரது தீவிர ஆதரவாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.தாமதப்படுத்தினால் தேசிய கழிவாக மாறிவிடும். 26 ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ளதால் வீணாகிவிடும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட உத்தரவிட்டுள்ளது.
0
0