பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்… தூத்துக்குடி அருகே பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 12:38 pm

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28). இவர் இன்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்தது சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கொலை நடைபெற்ற இடத்திற்கு வந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?