நிம்மதியே இல்ல.. ரூ.25 கோடி பரிசு கிடைச்சது நினைச்சு வருத்தப்படற.. : ஆட்டோ ஓட்டுநர் வேதனை.. வெளியான காரணம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2022, 9:35 pm
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் ரூ.25 கோடி பரிசுத்தொகை வென்ற ஆட்டோ டிரைவர் அனுப் வென்றது கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் வைரலானது.
இந்த பரிசுத்தொகையால் ஒரே நாளில் நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர் அனுப் பிரபலமாகிவிட்டார். மலேசியா செல்ல இருந்த நிலையில் தனது மகனின் உண்டியலில் இருந்து லாட்டரி வாங்கி ரூ.25 கோடி வென்றது நாட்டு மக்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்த பணத்தை பெற்று சொந்தமாக ஓட்டல் கட்டுவேன் என கூறியிருந்தார். பரிசுத்தொகை கிடைத்து 5 நாட்களே ஆகியுள்ள நிலையில், தற்போது வருத்தத்தில் இருப்பதாக அனுப் புலம்பியுள்ளார்.
இது குறித்து அனுப் கூறுகையில், நான் எனது ஒட்டு மொத்த நிம்மதியையும் இழந்துவிட்டேன். எனது வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. லாட்டரியில் கிடைத்த தொகையில் ஒரு சிறிய தொகையை கொடுத்து உதவுமாறு நாள்தோறும் பலர் என் வீட்டுக்கு வந்து நச்சரிக்கின்றனர்.
பரிசுத்தொகை வருவதற்கு முன்பாக நான் மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை. தயவு செய்து உதவி கேட்டு என் வீட்டு கதவை தட்ட வேண்டாம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. எங்கு போனாலும் மக்கள் சூழ்ந்து விடுகின்றனர். இதை விட சொற்ப பரிசுத்தொகையே கிடத்திருக்கலாம்’ என்றார்.