தோட்டத்தில் விளையாட சென்ற பள்ளிச் சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : கண்மாயில் மூழ்கி மூன்று பேர் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 6:59 pm

திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே தோட்டத்திற்கு விளையாட சென்ற 3 குழந்தைகள் கண்மாய் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுத்துப்பட்டி கிராமத்தில் தோட்டத்திற்கு விளையாடச் சென்ற 3 பள்ளி குழந்தைகள் அருகே இருந்த கண்மாய் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தனலட்சுமி, முத்து, கிருத்திக் ஆகிய மூன்று குழந்தைகளோடு ஐந்து பேர் அந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு விளையாடச் சென்றுள்ளனர். அந்தத் தோட்டத்தின் அருகே இருந்த கண்மாய் தண்ணீரில் ஐந்து பேரும் இறங்கி விளையாட தொடங்கியுள்ளனர்.

இதில் முத்து, தனலட்சுமி, கிருத்திக் ஆகிய மூவரும் கண்மாயின் ஆழமான பகுதியில் சென்றதால் தண்ணீரில் திடீரென மூழ்கி மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற இரண்டு குழந்தைகளும் கிராமத்துக்குள் வந்து கூறி ஊர் மக்களை அழைத்துச் சென்றனர் தண்ணீருக்குள் இறங்கி தேடிய கிராம மக்கள் மூன்று குழந்தைகளையும் சடலமாக மீட்டனர்.

குழந்தைகள் மூவரும் ஒன்றுவிட்ட உறவினர்கள் என்பதால் பெற்றோர்களும் கிராமத்தினரும் கதறி அழுதனர். மீட்கப்பட்ட குழந்தையின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இச்சம்பவம் தொடர்பாக விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாளன்று தோட்டத்திற்கு விளையாட சென்ற மூன்று பள்ளி குழந்தைகள் கண்மாய் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!