விடிய விடிய பெய்யும் கனமழை… பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…2வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை
Author: Babu Lakshmanan18 October 2022, 4:54 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய தொடரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, 2வது நாளாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து சாரல் மழையும் அவ்வபோது கனமழையும் பெய்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 44.88 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு 303 கன அடி நீர் உள்வரத்து காணப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு 4116கன அடிநீர் திறந்துவிடபட்டுள்ளதால் கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து பாதுகாப்பு வேலியையும் தாண்டி கொட்டுவதால் 2வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தடை விதிக்கபட்டுள்ளது.
இதேபோல், குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சூழல் தொடர்ந்து நிலவுவதால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.