தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்.. சிபிசிஐடி மேல் நம்பிக்கையே போய்விட்டது : ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2022, 7:47 pm
கள்ளக்குறிச்சி கனியமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த விவகாரத்தில் அடுத்தடுத்த பல சந்தேகங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையும் மாணவி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என வந்துள்ளது.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை ஒருதலைபட்சமாக நடந்து வருவதாக மாணவியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சம்பந்தமே இல்லாமல் சம்மன் இல்லாமல் தனது மகள் மரணத்தில் தங்கள் உறவினர்களை மணிக்கணக்கில் காக்க வைத்து விசாரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைந்து விசாரித்து முடித்து அனுப்பி வைப்பதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை என்பது தனது மகளின் மரணம் தற்கொலைதான் என ஒத்துக் கொள்ள வற்புறுத்தி வருவதாகவும் ஸ்ரீமதி என் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வுக்குட்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்றும், ஆனால் அதிகாரிகள் மாறாக தனது உறவினர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை எனவும், எனவே தனியாக ஒரு குழு அமைத்து தனது மகளின் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீமதி என் தாய் செல்வி கோரிக்கை வைத்தார். இது குறித்து டிஜிபியை சந்தித்து மனு அளித்ததாகவும் இது தொடர்பாக அடுத்து முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.