திமுக தான் தங்களின் ஒரே எதிரி.. இபிஎஸ் இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக இல்லாமல் போயிருக்கும் ; எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு..!!
Author: Babu Lakshmanan21 November 2022, 9:41 am
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சிறப்பான முடிவு எடுப்பார் என்றும், எடப்பாடி பழனிசாமி முடிவு தான் எங்கள் முடிவு என மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.

மதுரை எல்லிஸ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார், 500க்கும் மேற்பட்ட அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசியதாவது ;- திருப்பரங்குன்றம் தொகுதி அஇஅதிமுக-வின் முக்கியமான தொகுதியாகும். திருப்பரங்குன்றம் வாக்குச்சாவடி முகவர்களை ஒருசேர பார்த்து வாழ்த்து சொல்லும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சியை பார்க்கிறேன். நம்முடைய பணி சிறப்பாக இருக்க வேண்டும். இதுதான் நமக்கு சரியான நேரம்.
எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை காக்காவிட்டால் என்றோ வீழ்ந்து போயிருக்கும். எடப்பாடி பழனிசாமியை சுற்றி இருக்கக்கூடியவர்கள் எம்ஜிஆரிடம் பயிற்சி பெற்றவர்கள். அவரிடம் பயணித்தவர்கள்.
அதிமுக எல்லா கட்சிகளிடமும் கூட்டணியில் இருந்திருக்கிறது. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முடிவெடுப்பார். எடப்பாடி பழனிசாமி முடிவு தான் எங்கள் முடிவு. அதில் சந்தேகம் இல்லை. அவருக்கு உள்ள திறமை போல் எவருக்கும் இல்லை. எந்தக் கட்சியினராலும் எடைபோட முடியாத தலைவர் எடப்பாடி. இன்னும் இளைஞர்களை அதிமுக ஈர்க்க வேண்டும்.
எம்ஜிஆர் அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த கொள்கை, மக்கள் மனங்கள் தான். அதுதான் எங்கள் கொள்கை. எந்த அதிகாரியும் அமைச்சர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கு ஒட்டுமொத்த உறவு இல்லை. அமைச்சர்கள் தவறாக பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கூறும் நிலைமை உள்ளது.
திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களை தான் நம் தற்போது ஒதுக்கியுள்ளோம். 62 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பது சாதாரண விசயம் அல்ல. திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதையும் செய்யவில்லை.
நமக்கு திமுக மட்டும் தான் ஒரே எதிரி. வீட்டு வரியை உயர்த்திய திமுக தான் நமக்கு எதிரி. பால் விலையை உயர்த்திய திமுக தான் எதிரி. சட்டம் ஒழுங்கை காக்க தவறிய திமுக தான் எதிரி. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆன பிறகுதான் கட்சியின் நிலைமை மோசமாகும். ஆனால் ஒரே வருடத்தில் தற்போது திமுக மோசமாக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.