நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டாதீங்க : அதிமுகவுக்கு மட்டுமல்ல திமுகவுக்கும் சேர்த்து சொல்றேன்… பொங்கிய பாமக நிர்வாகி!!

Author: Babu Lakshmanan
3 January 2023, 7:48 pm

பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும் என்றும் பாமகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் கே பாலு பேசியதாவது:- 1996ல் நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 தேர்தலை சந்தித்தார். அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்துள்ளது. அதிமுகவின் வெற்றிக்கு பா.ம.க. தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை.

மைனாரிட்டி திமுக என அதிமுகவால் விமர்சிக்கப்பட்டபோது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளித்த பா.ம.க., கருணாநிதி முதல்வராக நாங்கள் தான் காரணம் என சொல்லியதில்லை, என தெரிவித்தார்.

பாமகவிற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யாரெனக் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பாலு, நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம், தருணம், சூழல் தற்போது இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும், அதிமுக கருத்தை தான் ஜெயக்குமார் கூறினாரா என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் தான் உறுதிபடுத்த வேண்டும் என்ற அவர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியை 2 ஆண்டுகள் தொடர்வதற்கும், ஜெயகுமார் அமைச்சராக தொடர்வதற்கும் நாங்கள் தான் காரணம் என்பதை எப்போதும் சொல்லியதில்லை என்று கூறினார்.

அதிமுக வீழ்ந்தபோதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவை செயல்பாடுகளை எப்போதும் மறக்க கூடாது எனவும், ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும் என்றும் கூறினார்.

பாஜக வாட்ச், திமுகவிற்கு மக்களிடம் அதிருப்தி போன்றவை குறித்தும் பொதுக்குழுவில் பேசியதாகவும், அதிமுகவை பற்றி மட்டும் பேசவில்லை எனக் கூறிய வழக்கறிஞர் பாலு, மக்களுக்கு தேவையானவற்றை ஆட்சியாளர்களிடம் பெறும் பணியை பாமக தொடர்ந்து செய்யும் என்றும் தெரிவித்தார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!