ஜல்லிக்கட்டு காளைகளை கடத்திய கும்பல்.. திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம் ; காவலரை தூக்கி வீசிய வாகனம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan12 January 2023, 6:00 pm
மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதி காயம் ஏற்படுத்திய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை பகுதிகளில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று நள்ளிரவு (ஜன.11) கூடல் புதூர் சோதனை சாவடியில் மாடுகளுடன் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் தவமணி சைகை காட்டினார். வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகார்டில் அந்த வாகனம் மோதியது.
மோதிய வேகத்தில் பேரிகார்டு எஸ்.ஐ. தவமணியின் மீது விழுந்து அவரது இடது காலில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடல் புதூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அன்றைய தினம் எஸ்.ஐ. தவமணி மீது மோத முயற்சித்த அதே சரக்கு வாகனத்தில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் மாடுகளை வாகனத்தில் கடத்தி செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, மதுரை மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகள் உட்பட பல மாடுகளை வட மாநில மர்ம கும்பல் ஒன்று தொடர்ந்து கடத்திச்செல்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்வதில் போலீஸார் சுணக்கம் காட்டி வரும் நிலையில், தற்போது கொள்ளையர்களால் ஒரு காவல் அதிகாரிக்கு காயம் ஏற்பட்ட பின்பாவது விசாரணை தீவிரப்படுத்தப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.