மூட்டை மூட்டையாக பணம் எடுத்து சென்றாரா அண்ணாமலை? ஹெலிகாப்டரில் நடந்த சோதனையால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 8:11 pm

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. அவர் கர்நாடகாவில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாஜக தேர்தல் பணிக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார்.

அவர் ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு வந்த ஹெலிகாப்டரில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டதாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றஞ்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை வந்த கார், ஹெலிகாப்டர் ஆகியவற்றில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும், சோதனையில் தேர்தல் நடத்தை விதிகள் மீறும் வகையில் எதுவும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், நான் சாமானியன். கால விரயத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார்.

கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி. நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது.
சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!