ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டி விற்பனை… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
Author: Babu Lakshmanan31 May 2023, 10:26 am
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரத்தின் இறுதியில் உயர்ந்து காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5,645க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதேவேளையில், ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.76.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.