அமித்ஷா வருகையின் போது மின்தடை… நாங்க அரசியல் பண்ண ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க : அண்ணாமலை வார்னிங்!!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2023, 3:48 pm
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வருகை தந்துள்ளார். மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நிறைவுப்பெற்றது.
கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில், சென்னை, கிண்டியில் அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மின் நிறுத்தம் தொடர்பாக அரசியல் செய்ய விரும்பவில்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.
மேலும், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்றைய பொதுகூட்டத்தில் பதில் தெரிவிக்கப்படும் அதேப்போல், நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் ” என்று அவர் கூறினார்.