செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி… காவேரி மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2023, 11:19 am

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். அப்போது இவர், டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ். அல்லி உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
இதனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை கோரியிருந்தது.

இதன் மீது நடந்த விசாரணையில், கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு வெளியிட்டார்.

இந்த நிலையில், அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன்கிழமை (21-ந்தேதி) பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

அவருக்கு, இருதயத்தில் செல்ல கூடிய 3 ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால், அமலாக்க துறையினரின் விசாரணை ஒரு புறம் நடைபெற உள்ள சூழலில், மறுபுறம் அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • Shobana அந்த சத்தம்.. அம்மாவுக்கு டீ.. அடங்காத உயிர்.. ஷோபனாவின் கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடம்!