எதிர்கட்சிகளை திசைதிருப்பும் பாஜகவின் தந்திரம்… இதைப் பற்றி சிந்தித்து திமுக கவலைப்படவில்லை ; முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 4:25 pm

இந்தியாவிற்கு ஆபத்து வந்துள்ளதாகவும், ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்கு தான் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் முன்னெடுத்து சென்றனர்.

பல்வேறு மாநில எதிர்ட்கட்சித் தலைவர்களை சந்தித்து நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த நிலையில் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

இந்திரலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமான மூலம் பெங்களூரு புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

அப்போது கூறியதாவது :- ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பீகார் மாநிலம் பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகள் எடுத்துள்ளனர். அதேபோல், இன்றும், நாளையும் பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பீகார் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து கூட்டம் கூட்டப்படுவது பாஜகவின் ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்துள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை இது போன்ற பணிகளை ஏற்கனவே வட மாநில பகுதிகளில் பாஜக செய்து கொண்டிருந்தது தற்போது தமிழ்நாட்டில் அந்த பணியை தொடங்கியுள்ளது.

அதைப்பற்றி சிந்தித்து திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இது கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதாவின் போடப்பட்ட பொய் வழக்கு. அதன் பின்பு தொடர்ந்து பத்து ஆண்டுகளும் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது எல்லாம் இது போன்ற சோதனை அவர்கள் நடத்தவில்லை.

அண்மையில் பொன்முடி மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். தற்போது நடந்து வரும் சோதனையின் வழக்கும் அவர் சட்டப்படி சந்திப்பார். வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை இதற்கெல்லாம் மக்கள் நிச்சயம் பதில் வழங்குவார்கள். அதற்கு தயாராக இருக்கின்றார்கள் இதுதான் உண்மை.

பீகார், கர்நாடகா இன்னும் பல மாநிலங்களில் நடக்க உள்ள இந்த கூட்டத்தை திசை திருப்ப பாஜக செய்யக்கூடிய தந்திரம் தான் இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் சமாளிப்பதற்கு தயாராக உள்ளோம். ஏற்கனவே தமிழகத்தில் ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கதுறையும் உடன் சேர்ந்து இருக்கிறது. எனவே தேர்தல் பிரச்சாரம் எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்.

இதெல்லாம் சர்வ சாதாரணம் திசை திருப்பக் கூடிய நாடகம். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதை எல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று மக்களுக்கு மனசாட்சி படி தெரியும். காவேரி மேகதாது பிரச்சினை பொருத்தவரை கலைஞர் என்ன முடிவெடுத்து அதை நிறைவேற்றிக் கொண்டிருந்தாரோ, அந்த பணியில் இருந்து தாங்கள் சிறிதும் நழுவாமல் அதை கடைபிடிப்போம்.

தற்போது நடைபெற உள்ள கூட்டம் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவை அகற்றுவதற்கான கூட்டம். தற்போது இந்தியாவுக்கே ஆபத்து வந்துள்ளது. அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டம் எதிர்கட்சிகளால் நடைபெற்று வருகிறது, இவ்வாறு கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்