தண்ணீர் வியாபாரி ஓடஓட வெட்டிப் படுகொலை… கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!
Author: Babu Lakshmanan9 August 2023, 4:46 pm
மதுரை ; அலங்காநல்லூர் அருகே தண்ணீர் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (45). அப்பகுதியில் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். மேலும், கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கம்பெனியை அடைத்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். வீட்டிற்கு மிக அருகில் சென்ற போது, மர்மநபர்கள் பாலனை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்துள்ளனர். இதில் பாலனுக்கு தொடை, கழுத்து, மற்றும் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் தொழில் போட்டியா..?, கள்ளக்காதலா..?, சொத்து தகராறா..? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.