‘தேர்தல் வாக்குறுதி 181 என்னாச்சு..?’ CM ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் ; பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!!
Author: Babu Lakshmanan25 September 2023, 3:53 pm
திமுக தேர்தல் வாக்குறுதி 181- ன்படி 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கதினர் கலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக தேர்தல் வாக்குறுதி 181ஐ தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் இருந்து 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தினர் கூறியதாவது :- 12 கல்வியாண்டுகளாக அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், வாழ்வியல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.
பலமுறை எங்களது கோரிக்கையை போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தியும், பணி நிரந்தரம் செய்யாததால் எங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் எங்களது வாழ்வாதார பணிநிரந்தர கோரிக்கை வலியுறுத்தி முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவனஈர்ப்பு மற்றும் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, உயர்அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் நிதித்துறை ஒப்புதல் இல்லை என அதிகாரிகள் பதில் அளிப்பது எங்களுக்கு பெரும் மாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும்.
தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களும் வாழ்வாதாரம் காக்க பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும், என போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.