‘7 நாளுக்கு ரூம் போட்டு கொடுங்க’.. விமானப் பணிப்பெண்களிடம் பயணிகள் வாக்குவாதம்… மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan11 October 2023, 10:42 am
இயந்திர கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து 39 பயணிகளுடன் நேற்று மதியம் 12:05க்கு கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், விமானம் ரத்து செய்யப்பட்டதாக எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
உணவு மற்றும் பயணிகள் தங்குவதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளும் ஸ்பைஸ் நிறுவனம் செய்யவில்லை என்று பயணிகள் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பின்னர், மாற்று விமானம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாற்று விமானம் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி மதுரை விமான நிலையத்திற்கு 5 மணிக்கு வந்தடையும் என்று ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதில் கோபமடைந்த பயணிகள் 19க்கும் மேற்பட்டோர் விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விட்டனர். மீதமுள்ள 20 பேர் மட்டும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள மாற்று விமானம் மூலம் மாலை ஐந்து மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை சென்றனர்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பயணிகளுக்கான மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் இயந்திர கோளாறினால் அடிக்கடி ரத்து செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.