செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல.. கவர்ச்சி விளம்பரம் அறிவித்த பிரபல நகைக்கடை மூடல் : நகைச்சீட்டு போட்டவர்கள் கண்ணீர்!!!
Author: Udayachandran RadhaKrishnan17 October 2023, 4:59 pm
செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல.. கவர்ச்சி விளம்பரம் அறிவித்த பிரபல நகைக்கடை மூடல் : நகைச்சீட்டு போட்டவர்கள் கண்ணீர்!!!
திருச்சி கரூர் சாலையில் ப்ரணவ் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த நகைக்கடை சார்பில் 0% செய்கூலி, சேதாரம் என்றும் தங்களிடம் நகை வாங்கினால் சவரனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் எனவும் கவர்ச்சிகர விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
போதாகுறைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ராதிகா உள்ளிட்டோரை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டு அவர்கள் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டன.
இதனை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்த பணத்தை மாதந்தோறும் ப்ரணவ் ஜுவல்லர்ஸில் நகைச்சீட்டு கட்டி வந்தனர்.
500 ரூபாயில் தொடங்கி லட்சங்கள் வரை நகைச் சீட்டுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் உங்களுக்கு அப்படி செய்கிறோம், இப்படி செய்கிறோம் என ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டிருக்கின்றனர்.
இதனை நம்பி உழைத்து சேர்த்த பணத்தை மொத்தமாக பறிகொடுத்துவிட்டு இன்று நடுவீதியில் நின்று வயிற்றெரிச்சலுடன் பலரும் சாபம் விட்டு கண்ணீர் வடித்தனர்.
ப்ரணவ் ஜூவல்லர்ஸ் மூடப்பட்டதால் தங்கள் முதலீட்டை திருப்பி பெற்றுக் கொடுக்குமாறு கடையை முற்றுகையிட்ட முதலீட்டாளர்களிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரை அணுகுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
திருச்சி மட்டுமல்ல மதுரை, சென்னை, நாகர்கோவில் என பல இடங்களில் ப்ரணவ் ஜுவல்லர்ஸ்க்கு கிளைகள் உள்ளன. மோசடிகள் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஏமாறக் கூடிய நிகழ்வு தொடர் கதையாகவே உள்ளது.
செய்கூலி இல்லாமல், சேதாரம் இல்லாமல் எப்படி நகை விற்க முடியும், அதெப்படி எங்குமே இல்லாத வகையில் பவுனுக்கு 4,000 ரூபாய் வரை குறைவு என்பதை எல்லாம் மக்கள் யோசித்திருந்தால் இன்று தங்கள் மொத்த சேமிப்பையும் சேதாரம் இல்லாமல் பாதுகாத்திருக்க முடியும். திருச்சியை போலவே மதுரையிலும் ரூ.40 கோடி வரை மோசடி நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.