ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. அமலாக்கத்துறையினர் அதிரடி : அரசியலில் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan6 November 2023, 6:18 pm
ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. அமலாக்கத்துறையினர் அதிரடி : அரசியலில் பரபரப்பு!!!
ஆம் ஆத்மி மாநிலம் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ராவை அமலாக்கத்துறை இன்று (திங்கள்கிழமை) கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 41 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர்.
சோதனையில், 16.57 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் கிடைத்ததாக சிபிஐ குறிப்பிட்டு இருந்தது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி,அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் வைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் கஜ்ஜனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகையில், இந்த கைது நடவடிக்கை எங்களை இழிவுபடுத்துவதற்கான சதி என்றும், ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்து இந்த பிரச்சனை இருக்கிறது.
ஆனால் பாஜகவுக்கு எங்களை இழிவுபடுத்துவது தான் நோக்கம் அதனால் தான் பொதுக்கூட்டத்தின் போது அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. ஆம் அத்மியின் செய்தி தொடர்பாளர் மல்விந்தர் காங் கூறினார்.