சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்… பணம் தராததால் கடையை சூறையாடிய சம்பவம் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!!
Author: Babu Lakshmanan7 November 2023, 9:24 am
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக காவல்துறை நடவடிக்கைகளால் கொடைக்கானலில் திருநங்கைகள் மிரட்டல் குறைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கும்பலாக வந்து ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, பிரையன்ட் பூங்கா பகுதி நகரின் முக்கிய பகுதிகள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளை வழிமறித்து பணம் கேட்டு வருகின்றனர். மேலும், மிரட்டல் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏரிச்சாலை பகுதியில் உள்ள கடைகளில் பணம் கேட்டனர். அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருள்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் ஏரிச்சாலை, நகர் பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இதுபோன்று பணம் பறிக்கும் திருநங்கைகள் மீதுகாவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.