நுரைக்கு திரை போட்ட மாநகராட்சி அதிகாரிகள்… இதுதான் தீர்வா…? கண்மாயில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
10 November 2023, 11:06 am

திருப்பரங்குன்றம் அருகே கண்மாய் தண்ணீரில் பொங்கி வரும் நுரைக்கு மாநகராட்சி அதிகாரிகள் திரை போட்ட சம்பவம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

மதுரை அவனியாபுரம் – விமான நிலைய சாலையில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தொடர் மழையால் கண்மாய் நிரம்பி கடந்த ஐந்து நாட்களாக மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் மறுகால் பாயும் தண்ணீரில் மலை போல் நுரை பொங்கி எழுந்து காற்றில் கலந்து சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மீது பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த ஐந்து நாட்களாக அவனியாபுரம் – விமான நிலைய சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நுரையால் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல், இதனால் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். தொடர்ந்து, இப்பகுதி மக்கள் கண்மாய் நீரில் கழிவு நீர் கலப்பதால் நுரை பொங்கி எழுந்து வருவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருவதாகவும் கூறினர்.

மேலும், கண்மாய் நீரில் சாக்கடை நீரை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து நுரை வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கழிவு நீர் கலப்பதால் அருகில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நுரையை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், முறையைத் தடுக்க அதிகாரிகள் திரை போட்டாலும் அதையும் தாண்டி நுரை வெளியேறி மீண்டும் சாலையில் சென்று விழுகிறது. கழிவு நீர் கலப்பதை முழுமையாக தடுத்தால் மட்டுமே முறை வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!