டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை… தட்டி கேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல் ; கோவையில் அராஜகம்!!
Author: Babu Lakshmanan12 February 2024, 8:32 am
கோவை வெள்ளானைப்பட்டி டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததை தட்டி கேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு 10 மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த எஸ்.எஸ்.குளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் விற்பனையை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து உருட்டுக்கட்டையால் அவர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுரேஷ்குமார் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே டாஸ்மாக் பாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதை தட்டி கேட்ட நபரை தாக்கிய சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.