கூட்டணி பற்றி கவலையில்ல… எதிர்த்து எத்தனை பேர் வந்தாலும்… நாங்க தயார் ; கோவையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்..!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 1:24 pm

கோவை ; யார் கூட்டணிக்கு வந்தாலும் கூட்டணியோடு, இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இந்த நிலையில், வருகின்ற 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டியும், கூட்டணியை குறிப்பிட்டும் அம்மா பேரவை கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் 76வது பிறந்தநாள் காணும் புரட்சித்தலைவியை (ஜெயலலிதா) வணங்குகிறோம் எனவும், “தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார், எத்தனை கூட்டணியோடு யார் வந்தாலும், எங்களோடு யார் கூட்டணி வந்தாலும், கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார், நாளையும் நமதே! நாற்பதும் நமதே!,” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, மற்றும் அம்மா பேரவை கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!