‘கொன்னு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்’… மகனின் காதலியை மிரட்டிய தந்தை ; நாடகமாடி கர்ப்பத்தையும் கலைத்த கொடூரம்!!
Author: Babu Lakshmanan24 May 2024, 11:33 am
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/05/dgl-love-updatenews360-1024x560.jpg)
திண்டுக்கல் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூரைச் சேர்ந்தவர் வீரையா. இவரது மகள் சூர்யா (22) பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதனை ஆய்வாளராக (செக்கிங் இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வருபவர் முருகன். இவரது மகன் அருண்குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும் படிக்க: 2வது நாளாக மளமளவென சரிந்தது தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் தெரியுமா..?!!
இந்நிலையில், அருண்குமாரும் சூர்யாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் சென்னையில் பணியாற்றி வருவதால், சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வந்தனர். இதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சூர்யா கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அருண்குமாரின் பெற்றோருக்கு தெரிய வர, சென்னைக்கு விரைந்து சென்ற, உறவினர்கள் சூர்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கருக்கலைப்பு செய்த பிறகு, சாலைப்புதூர் கிராமத்தில் திருமண வைத்துக்கொள்ளலாம்? என ஏமாற்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் சொந்த ஊரான பட்டிவீரன்பட்டி அருகே, சாலைப்புதூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், அருண்குமாருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சூர்யா தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து அருண்குமாரிடம் கேட்டபோது, திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த சூர்யா புதன்கிழமை இரவு காதலன் அருண்குமார் வீட்டு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றோர்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து ஏமாற்றி கர்பமாக்கிய காதலன் அருண்குமார் வீட்டு முன்பு காதலி சூர்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0