மானை வேட்டையாடி கெத்தாக போட்டோ போட்ட இளைஞர்கள்… கொத்தாக அள்ளிய வனத்துறை..!
Author: Vignesh29 June 2024, 1:30 pm
திண்டுக்கல்: கொடைக்கானலில் மான் வேட்டையாடி சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்ட ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர் .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரும்பாலான இடங்கள் வனப் பகுதியாகவே இருந்து வருகிறது . இங்கு மான், காட்டெருமை, சிறுத்தை, புலி ,உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் இருந்து வருகிறது . தொடர்ந்து இந்த வன விலங்குகள் நகர் பகுதி மட்டுமின்றி நகர் பகுதியில் ஒட்டி உள்ள இடங்களிலும் உலா வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த சிலர் மான் வேட்டையாடி அதனை சமைப்பதற்காக தயார் செய்து வந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த புகைப்படம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி, மற்றும் சமைத்த மான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார், ராஜேஷ் கண்ணன், அஜித், சிவராமன், ராமகிருஷ்ணன், பிரவீன் ஆகிய ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் பல்வேறு வேட்டை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை தீவிர படுத்தி உள்ளனர்.