ATM மெஷினை அறுத்து திருட்டு முயற்சி.. CCTV காட்சிகளை பார்த்து ஷாக் ஆன அதிகாரிகள்..!
Author: Vignesh26 ஜூலை 2024, 5:12 மணி
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஏராளமான தனியார் நூற்பாலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன.
இதில், பணி புரியும் தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்காக வடமதுரையில் செயல்படும் தனியார் வங்கியின் ஏ.டி.எம் அறை மூனாண்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் முகத்தில் துணியை சுற்றியபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர் ட்ரிலிங் மிஷினைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை அறுக்க முயற்சி செய்துள்ளனர்.
நீண்ட நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை அறுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக பார்த்த வங்கி மேலிட அதிகாரிகள் இது குறித்து வடமதுரை வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்தனர்.
வடமதுரை கிளை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை அறுக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் எந்திரத்தை அறுக்க முடியாததால் ஏ.டி.எம் உள்ளே வைத்திருந்த பணம் ரூபாய் 4 லட்சத்தி 44 ஆயிரம் தப்பியது.
இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம் எந்திரத்தை அறுத்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0