ஓய்வு பெறும் நேரத்தில் சுருட்ட நினைத்த சர்வேயர்.. லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது!

Author: Sudha
2 ஆகஸ்ட் 2024, 10:22 காலை
Quick Share

திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் பரளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்.ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்.இவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஒரு ஏக்கர் 17 சென்ட் வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டையில் உள்ளது.

பாகப்பிரிவினை செய்யப்பட்ட அந்த இடத்திற்கு பட்டா கேட்டு ராஜசேகர் கடந்த 12-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். அதனைத்தொடர்ந்து ராஜசேகரை செல்போனில் தொடர்பு கொண்ட வேல்வார்கோட்டை சர்வேயர் சுப்பிரமணி(59) என்பவர் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

மேலும் பணத்தை வடமதுரை மாரியம்மன் கோவில் வளைவு பகுதியில் உள்ள ஓட்டல் அருகே கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ராஜசேகர், இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ராஜசேகரிடம் ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து, சுப்பிரமணியை சந்தித்து கொடுக்குமாறு கூறிய அனுப்பினர்.

மேலும் அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பரிண்டு நாகராஜன், தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் மறைந்து இருந்தனர். அப்போது ராஜசேகர் தான் கொண்டு சென்ற பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்துள்ளார். அவரிடமிருந்து சுப்பிரமணி பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.

அதனைத்தொடர்ந்து அவரை வடமதுரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட சுப்பிரமணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் பொது இடத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 185

    0

    0