முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியிடம் கெஞ்சினாரா? பாஜக சொன்ன பகீர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan7 ஆகஸ்ட் 2024, 8:09 மணி
சிவசேனா (UBT) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உறுதி செய்வதற்காக டெல்லி சென்றதாக பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் ஷெலார் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆஷிஷ் ஷெலார் கூறியதாவது:- உத்தவ் தாக்கரே பாதிக்கப்பட்ட பெண்கள், விவசாயிகள் அல்லது மகாராஷ்டிரா இளைஞர்களின் பிரச்சனையை வெளிப்படுத்துவதற்காக டெல்லி செல்லவில்லை. மீண்டும் முதல்வராக பதவி ஏற்க விரும்பும் (அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது) உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியின் ஆதரவை வேண்டி டெல்லி சென்றுள்ளார்.
மக்களவை தேர்தலில் சிவசேனா (UBT), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (SP) ஆகிய கட்சிகளின் மகா விகா அகாதி 48 இடங்களில் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நேற்று உத்தவ் தாக்கரே டெல்லி சென்றுள்ளார். அவர் இந்தியா கூட்டணியின் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது வரவிருக்கும் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அவர் கூறுகையில் “மகாராஷ்டிர மாநில முதல்வர்கள் (பாஜக மற்றும் சிவசேனா) டெல்லி செல்வதை உத்தவ் தாக்கரே எப்போதும் விமர்சனம் செய்வார். ஆனால் அவர்களுடைய (உத்தவ் தாக்கரே கட்சி) பலவீனத்தை அவர்கள் நிராகரிப்பார்கள். கனமழை காரணமாக சேதம் அடைந்த பயிர்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு உதவி கேட்பதற்காக டெல்லி செல்லவில்லை.
வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்காக செல்லவில்லை. மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக கூட அவர் குரல் எழுப்பவில்லை” என்றார்.பாஜக உடன் மோதல் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநில முதல்வராக பதவி ஏற்றார்.
0
0