இந்த திட்டத்தை பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டு வர தைரியம் இருக்கா? கனிமொழி எம்பி கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
18 ஆகஸ்ட் 2024, 11:05 காலை
Kani
Quick Share

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் அருகே வைகைக்கும் தேவநேய பாவாணர் திடலில், வாகை மக்கள் இயக்கம் சார்பாக பெருந்தமிழர்கள் பெருவிழா 2024 நேற்று (17/08/2024) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபம் அமைத்தல் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி.இமானுவேல் சேகரனாருக்கு அரசு விழா மற்றும் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் தமிழ் அறிவை உணர்ந்து கொண்டு பாவணருக்கு மரியாதை அளித்த தலைவர் கலைஞர் என்றும், நாம் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை, அனைவரும் சமம் என்பதை திராவிட இயக்கமான இந்த மண்ணின் உணர்வு எனவும், திராவிட இயக்கம் சாதியே இல்லை என்கிறது ஆனால் ஜாதி மத பேதங்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து பிரிவினையை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்தக்கூடிய இயக்கம்தான் பாரதிய ஜனதா கட்சி என்றும் கூறினார்.

அனைத்து ஜாதிகளும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கொண்டுவர தயாரா எனவும் கேள்வி எழுப்பிய கனிமொழி, கடவுள் நம்பிக்கை இருக்கும் ஹிந்துக்களை கோவில் கருவறைக்கு அனுமதிக்க நீங்கள் தயாரா? அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை உங்களிடம் உள்ளதா எனவும் பாஜக ஆட்சியை குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிவாரண நிதியை தராமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு சாமானிய மக்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்காத வகையில் செய்யும் ஆட்சி பாஜக மோடி ஆட்சி. இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அது அதானி மற்றும் அம்பானி ஆகிய இரண்டு பேருக்கும்தான் என்று கூறினார்.

நிகழ்ச்சியில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தமிழ்நாடு மாநில டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,மே பதினேழு இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி, மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் முருகவேல்ராஜன், வாகை மக்கள் இயக்கம் நேரு தாஸ் கென்னடி, ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் தேவதாஸ் தெற்கு குருவி குளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, குருவி குளம் ஒன்றியக் கவுன்சிலர் வீரலட்சுமி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 344

    0

    0