பாஜக பிரமுகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்.. சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய கொடூரம்!
Author: Udayachandran RadhaKrishnan20 ஆகஸ்ட் 2024, 12:44 மணி
பல்லடம் அருகே பணப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பணப் பாளையம் கிளை தலைவராக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் டைமண்ட் என்பவர் கடைகளுக்கு டீ தூள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகிய இருவரும் இன்று பல்லடம் அருகே ராயர் பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கையில் பட்டா கத்திகளுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து பட்டாகத்தியால் தாக்கியுள்ளனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதை கண்ட எட்டு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் தமிழ்ச்செல்வன் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வினோத் கண்ணன் என்பவர் அதே பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
0
0