முதலமைச்சரின் சகேதாரர் வீட்டை இடிக்க நோட்டீஸ்… ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் நடவடிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan29 ஆகஸ்ட் 2024, 4:51 மணி
தெலங்கானா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பல அடுக்குமாடி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் நடிகர் நாகார்ஜுனாவின் என். கன்வென்ஷன் இடிக்கப்பட்டது.
இந்நிலையில் துர்கம் செருவு ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் திருப்பதி ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட பல முக்கிய கட்டிடங்களுக்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ் அனுப்பியது.
மாதப்பூர் அமர் கூட்டுறவுச் சொசைட்டி கீழ் துர்கம் செருவு ஏரியின் இடத்திற்கு உட்பட்ட இந்த கட்டமைப்புகள் 30 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ரங்காரெட்டி மாவட்ட ஆட்சியர், செரிலிங்கம்பள்ளி துணை ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ஏரியை ஒட்டியுள்ள நெக்டர்ஸ் காலனி, டாக்டர்கள் காலனி, கவுரி ஹில்ஸ், அமர் சொசைட்டி ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கும் இதேபோல் நோட்டீஸ் வழங்கினர்.
வால்டா சட்டத்தின் பிரிவு 23(1)ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள், ஏரியின் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஆக்கிரமித்துள்ள கட்டமைப்புகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தானாக முன்வந்து இடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மீறினால் அதிகாரிகள் தாங்களாகவே இடிக்கும் பணியை மேற்கொள்ள நேரிடும். இதுதவிர நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட குடியிருப்போர் மற்றும் வணிகர்கள் மத்தியில் இந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
துர்கம் செருவு ஏரி ஐதராபாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நன்கு அறியப்பட்ட அடையாளமாகும். இருப்பினும், பல ஆண்டுகளாக, ஆக்கிரமிப்புகள் அதன் பரப்பளவை வெகுவாகக் குறைத்துள்ளன.
முதலில் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்தது, சமீபத்திய ஆக்கிரமிப்புகளால் அதன் அளவீடுகள் குறைந்து ஏரி இப்போது 84 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது.
நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், பொறியாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.
பொதுமக்களின் நிலத்தை மீட்பதற்கும், ஏரியை மேலும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக அரசின் நடவடிக்கை அனைவர் மீதும் இருக்கும் என்றும் வருங்கால தலைமுறைக்கு இயற்கைக்கு மாறாக செயல்பட்டால் நம்மை இயற்கை பழிவாங்கும்.
இதற்கு உதாரணம் உத்தரகாண்ட், கேரளவில் வயநாடு சம்பவம். எனவே நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருக்காது என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
0
0