தூக்கத்திலே சதக் சதக்.. ஸ்கெட்ச் மாறிடுச்சு.. ஆடுகளை பாதுகாத்தவர் வெட்டி படுகொலை..!
Author: Vignesh31 ஆகஸ்ட் 2024, 6:08 மணி
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் பட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்த செம்மறி ஆடுகளை பராமரிப்பதற்காக மணிகண்டன் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆடுகள் வளர்க்கும் இடத்தில் வைத்து ஆடுகளை பராமரிக்கும் மணிகண்டனுக்கும் தேமாங்குளம் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மணிகண்டன் இல்லாததால் சுடலை ஆடுகளை நேற்று இரவு வயல்வெளியில் பட்டியில் அடைத்து விட்டு அதன் அருகே கட்டில் போட்டு படுத்து தூங்கி உள்ளார்.
காலையில் நீண்ட நேரம் ஆகியும் சுடலை எந்திரிக்கவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்றவர்கள் கட்டிலில் மூடியிருந்த போர்வையை எடுத்து பார்த்த போது சுடலை முகத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0