துணை மேயர் மீது 5 பிரிவுகளில் வழக்கு… ஆபாச வார்த்தை, சாதியை வைத்து திட்டிய சிபிஎம் பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 அக்டோபர் 2024, 6:23 மணி
Deputy Mayor Nagaraj
Quick Share

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகன் முருகானந்தம் வீட்டின் அருகிலேயே முடி திருத்தகம் நடத்தி வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கோழிக்குமாரிடம் தன்னுடைய சொந்த வீட்டை அடமானமாக வைத்து ரூபாய் பத்து லட்சம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு அடமானத்திற்காக பெறப்பட்ட பணத்தை முழுமையாக செலுத்தி விடுவதாகவும் அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோழி குமாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் மாறாக கோழிக்குமார் ரூ.15 லட்சம் தருவதாகவும் அதற்கு ஈடாக வீட்டை முழுவதும் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அந்த வீட்டை எழுதி கேட்டு வசந்தாவை குமார் என்ற கோழிக்குமார், கணேசன் என்ற வாய் கணேசன், முத்து என்ற புரோக்கர் முத்து ஆகிய மூன்று பேர் தாக்கி மிரட்டியதாகவும் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் மே 7ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க: அந்த விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் ஒரே மாதிரி… திருமா பாச்சா பலிக்காது : அதிமுக எம்எல்ஏ விமர்சனம்!

இந்நிலையில் மேற்கண்ட மூவர் மீதும் ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோழிக் குமாருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன், புரோக்கர் முத்து ஆகியோர் கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று வீட்டை கிரையத்திற்கு முடிக்கவும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது எனவும் பொது இடத்தில் வைத்து தன்னை தாக்கியதாகவும் ஆபாசமாகவும் சாதி ரீதியாகவும் மிரட்டியதாக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அலுவலகத்தில் வசந்தாவும் அவரது மகன் முருகானந்தமும் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து மதுரை மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் BNS 189, 296,329,115,351, சட்டப்பூர்வமாக செய்ய முடியாததை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பிறர் சொத்தின் மீது சட்டவிரோதமாக நுழைதல், காயத்தை ஏற்படுத்த முனைதல், உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் சி பி எம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 50

    0

    0