கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடியை நினைவுபடுத்திய ஐகோர்ட்.. எதற்காக தெரியுமா?

Author: Hariharasudhan
18 அக்டோபர் 2024, 6:10 மணி
Madurai
Quick Share

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோயில் செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்த சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை: திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திருவட்டாறு ஆதிகேசவர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டு உள்ளன. அந்த வகையில், கோயிலின் கலசத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கோயில் கும்பாபிஷேகத்தின் போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.

கோயிலில் தங்க ஆபரணங்கள், பழைய கலசம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். 1992ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. அப்போது கோயிலுக்குச் சொந்தமான தங்க அங்கி உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போயின. இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோயிலுக்குச் சொந்தமான பல தங்க ஆபரணங்கள், சிலைகள் எங்கே உள்ளது என்பது தெரியவில்லை.

அதேநேரம், இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் முறையாக பதில் அளிக்கப்படவில்லை. எனவே, திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகளை அவற்றின் பழைய இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயிலின் செயல் அலுவலர் ரத்தினவேல் நேரில் ஆஜராகினார். தொடர்ந்து, கோயில் நிர்வாகம் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கோயிலின் நகைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கடந்த வருடம் உத்தரவிட்ட நிலையில் ஏன் தாமதம் ஆனது? ஏன் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோயில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்த சமய அறநிலையத் துறையின் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி அமர்வு, செயல் அலுவலருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தும், அதனை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கவும் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த நகைகளின் பட்டியலின் படி, கோயிலின் நகைகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும், கோயிலில் காணாமல் போனதாகக் கூறப்படும் தங்க சிவலிங்கம் தொடர்பாக விசாரணை நடத்தவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை, விசாரணை ஆணையராக நியமிப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் சமர்ப்பித்திருக்கும் புகைப்படம் சிவலிங்கம் அல்ல, அது மகாதேவரின் சிலை. இரண்டிற்குமான எடை வித்தியாசம் 2 கிலோவாக உள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “அந்த சிலை தான் சிவலிங்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “இது கரகாட்டக்காரன் வாழைப்பழக் கதை போல உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிப்பதில் என்ன பிரச்னை?” என கேள்வி எழுப்பினர்.

அது மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரணை ஆணையராக நியமித்து, கோயிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கவும், பத்மநாபபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கும் நகைகள் குறித்தும் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதற்கு இந்த சமய அறநிலையத்துறை சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க : திருத்தணிக்கே மொட்டை போட்ட பலே கில்லாடிகள்.. சதுரங்க வேட்டை பாணியில் நூதன மோசடி!

தொடர்ந்து, “நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நகைகள் தொடர்பான பட்டியல் சமர்ப்பிக்கப்படாத நிலையில், கோயிலின் செயல் அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட பின்னர் நகை பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் நகைகளை சரி பார்ப்பதற்காக சமீபத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம்” எனக் குறிப்பிட்டு வழக்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.

  • Governor திராவிடத்தை தவறவிட்ட ஆளுநர் மேடை.. கொந்தளித்த தமிழ்நாடு.. மன்னிப்பு கோரிய டிடி தமிழ்!
  • Views: - 57

    0

    0

    மறுமொழி இடவும்