விலகினாலும் விடாத விசிக.. ஆதவ் ப்ளானை கையிலெடுத்த திருமா?
Author: Hariharasudhan3 January 2025, 6:05 pm
ஆதவ் அர்ஜுனாவின் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற ப்ளானை திருமாவளவன் கையிலெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், விசிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள நிலையில், அமைச்சர் பதவி வேண்டும் என்பதே இதனுடைய சாராம்சம்.
இருப்பினும், இதனை முற்றிலும் மறுக்க மறுத்த திருமாவளவன், அது எங்களுசெய்ய நிலைப்பாடு என்றும், ஆனால் தற்போது கூட்டணி வலுவாக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்றும் விளக்கம் அளித்து இருந்தார். இதனிடையே, தனியார் பதிப்பகம் ஒன்றின் சார்பாக நடத்தப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
இதில், பிறப்பால் இன்னொருவர் முதலமைச்சராகி விடக்கூடாது, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என ஆதார் அர்ஜுனா, விஜயை முன்வைத்து பேசி இருந்தார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், இது திமுக – விசிக இடையே பெரும் விவாதப் பொருளாக மாறி, இறுதியில் ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாத காலம் தற்காலிக இடைநீக்கம் செய்து திருமாவளவன் உத்தரவிட்டார்.
பின்னர், அடுத்த சில நாட்களில் தானாகவே கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வேண்டும் என ஆதவ் அர்ஜுனா திருமாவளவனிடம் கூறியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சட்டமன்றத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளராக அமைக்கும் பணியை திருமாவளவன் முடுக்கி விட்டுள்ளார். இதன் மூலம் கட்சியை பலப்படுத்துவது, தேர்தலுக்கான விரைவில் மக்களை சென்றடைவது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெறும் என திருமாவளவன் நம்பிக்கை கூறுகிறார்.
இதையும் படிங்க: நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஸ்பீடு பிரேக்கரால் திரும்ப வந்த உயிர்!
இருப்பினும், இது ஆதவ் அர்ஜுனாவின் ஐடியா என சிலர் கூறியபோதும் அதை அவர் மறுக்கவில்லை என்றும், இருப்பினும் இந்த திட்டத்தை தொடரலாம் எனவும் அவர் கூறியிருக்கிறார் என்பது கட்சியினுள் பேசு பொருளாக மாறி உள்ளது.