தந்தையின் உடலிலும் பாதி வேண்டும்.. இறுதிச் சடங்கில் அண்ணன் – தம்பி தகராறு.. எப்படி முடிந்தது?
Author: Hariharasudhan4 February 2025, 9:57 am
தந்தையின் உடலின் பாதி அளவாவது தான் இறுதிச் சடங்கு செய்வேன் எனக் கூறி தகராறு செய்த சகோதரரின் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், திகம்கர் மாவட்டத்தில் உள்ள லிதோரடால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர், தனது இளைய மகன் தேஷ்ராஜ் உடன் வசித்து வந்துள்ளார். மேலும், மூத்த மகன் கிஷன் ஊருக்கு வெளியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இது பற்றி அறிந்த கிஷன், தந்தை வசித்து வந்த தனது தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆனால், தம்பி தேஷ்ராஜ் இதனை ஏற்கவில்லை. பின்னர், இறுதிச் சடங்குகளை தான் செய்ய வேண்டும் என்பதே தந்தையின் விருப்பமாக இருந்தது என தேஷ்ராஜ் கூறியுள்ளார். இதனால் அண்ணன் – தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதிலும், மதுபோதையில் இருந்த கிஷன், இறுதிச் சடங்கு செய்ய தந்தையின் உடலில் பாதியையாவதுத் தர வேண்டும் எனக் கூறி தகராறு செய்துள்ளார்.
இதனால், தேஷ்ராஜ் மட்டுமின்றி, உறவினர்கள், ஊர்மக்கள் என அனைவருமே திகைத்து நின்றுள்ளனர். பின்னர், இது குறித்து அருகில் உள்ள ஜதாரா காவல் நிலையத்துக்கு கிராமத்தினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சமாதானப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. சுட்டுப்பிடித்த போலீசார்!
இதன்படி, மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்திய போலீசார், அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இளைய மகன் தேஷ்ராஜ், தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளார். இந்த நிகழ்வு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.