கணவருடன் கண்ணாமூச்சி ஆடிய கள்ளக்காதலன்.. தோட்டத்து வீட்டில் காத்திருந்த மனைவி.. எதிர்பாரா திருப்பம்!
Author: Hariharasudhan4 February 2025, 5:55 pm
மனைவியை மூன்று முறை தேடி வந்த கள்ளக்காதலனை கணவர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகவேல் (56). இவருக்கு 45 வயதான மனைவி உள்ளார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த மகன், அப்பகுதியில் உள்ள மில்லில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, முருகவேல், வாணி மற்றும் மகனுடன் கருமத்தம்பட்டி அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 4.45 மணி அளவில் இந்த வீட்டுக்கு ஒரு நபர் வந்துள்ளார். அப்போது, “என் குடும்பத்தை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டாயா?” எனக் கேட்டபடி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார் முருகவேல். இதனையடுத்து, வீட்டைவிட்டு வெளியே வந்த அந்த நபர், கத்தியை நெஞ்சில் இருந்து பிடுங்கியுள்ளார்.
பின்னர், அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அந்த நபரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக முருகவேலிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், முருகவேலின் மனைவிக்கும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி (40) என்பவருக்கும் ஏற்கனவே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அதேநேரம், முனியாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
மீண்டும் வந்த கள்ளக்காதலன்: இதனிடையே, மில்லில் பணியாற்றியபோது அப்பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், அவரை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி உள்ளார் முனியாண்டி. இதனால், மனைவியைக் காணாமல் தேடிய முருகவேல், அவர் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்துவதைக் கண்டுபிடித்து சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: காது குத்துவதற்காக மயக்க மருந்து.. 6 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!
இதனையடுத்து, அவர்கள் தாராபுரத்தில் தங்கியுள்ளனர். அங்கும் முனியாண்டி தேடி வந்து, முருகவேலின் மனைவியை மீண்டும் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி உள்ளார். எனவே, மீண்டும் முருகவேல் மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து, திருப்பூரில் தங்கியிருந்துள்ளார்.
அங்கும் முனியாண்டி தேடி வந்துள்ளார். இதனால், மனைவி, மகனுடன் கருமத்தம்பட்டி அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு இடம் மாறி வந்துள்ளார் முருகவேல். இந்த நிலையில்தான் மீண்டும் முனியாண்டி தேடிவர, அவரைக் காத்திருந்து முருகவேல் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.