8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 5 முதியவர்கள் உள்பட 7 பேர் கைது.. சிவகங்கையில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan5 February 2025, 5:54 pm
சிவகங்கை, மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குழந்தைகள் நல வாரியம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, யாரேனும் உங்களிடம் தவறுதலாக நடந்துள்ளனரா எனக் கேட்டுள்ளனர்.
அப்போது, முதலில் நான்கு மாணவிகள், தங்களிடம் பள்ளிக்குச் சென்று வரும் பொழுது தங்களைத் தவறான அணுகுமுறையில் தொட்டார்கள் எனவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து, மேலும் நான்கு மாணவிகள் இதுபோன்ற புகாரைக் கூறியுள்ளனர்.
பின்னர், இது குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்தக் குழந்தைகளின் பெற்றோர், மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மானாமதுரை போலீசார், மாணவிகளிடம் விசாரித்து உள்ளனர்.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களை, மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரம் முழு விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 3 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது!
மேலும், இந்த ஏழு பேரில் ஒருவரை, அந்தக் கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே சரமாரியாகத் தாக்கி, அவர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஐந்து முதியவர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.