ரூ.67,000-க்கு டிக்கெட் வாங்கியும் 5 பேர் மட்டுமே பார்த்த விடாமுயற்சி.. எங்கு தெரியுமா?
Author: Hariharasudhan6 February 2025, 5:02 pm
தென்காசியில், விடாமுயற்சி படத்தின் ரசிகர் மன்ற காட்சிகளுக்கு யாரும் முன்வரவில்லை என ரசிகர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசன்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம், 1996ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக் டவுன்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு, அவரது ரசிகர்கள் தங்களது பேராதரவினை அளித்து வருகின்றனர். மேக்கிங்கில் கச்சிதமாக இருந்தாலும், இது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றே கலவையான விமர்சனங்களில் அறிய முடிகிறது. மேலும், ரசிகர்களும் தியேட்டர் வாசல்களில் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம், சங்கன்கோவிலில் உள்ள ஒரு தியேட்டரில் படம் முடித்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் தனியார் செய்தி தொலைக்காட்சி தரப்பில் ரிவீவ் கேட்கப்பட்டு உள்ளது, அப்போது, கை நிறைய டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டே அந்த இளைஞர் பேட்டி அளிக்கிறார்.
அதில், “67 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினோம். 5 பேர் மட்டுமே படம் பார்த்துள்ளோம்” என்கிறார். அதற்கு, “ஏன் இப்படி ஆனது?” என செய்தியாளர் கேட்க, “ரசிகர் மன்ற டிக்கெட் எடுத்து வைத்தோம், ஆனால் யாரும் வரவில்லை” என்கிறார் இளைஞர். மீண்டும், “ஏன் அவர்கள் வரவில்லை?” என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு, “அவர்களுக்கு இதுபற்றி தெரியாது” எனக் கூறியதும், அருகில் உள்ள இளைஞர் மைக்கைப் பிடுங்கி, “அப்படியெல்லாம் கிடையாது. ரசிகர்கள் அவ்வளவாக வரவில்லை. டிஜே மற்றும் மேளம் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அதையும் ரத்து செய்துவிட்டனர்” எனக் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி கதை: அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் செய்துகொண்ட அஜித் – த்ரிஷா வாழ்க்கையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து விடுவதாக முடிவெடுத்த நிலையில், தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக அஜித் காரில் அழைத்துச் செல்கிறார்.
இதையும் படிங்க: பதுங்கி பாய்ந்தாரா அஜித்…ரசிகர்களை கவர்ந்ததா விடாமுயற்சி…படத்தின் திரை விமர்சனம்..!
இவ்வாறு செல்லும் வழியில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அப்போது, அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் அர்ஜுன் – ரெஜினா தம்பதி, அவர்களுக்கு உதவும் வகையில் த்ரிஷாவை அழைத்துச் சென்று அருகில் இருக்கும் ஒரு கபேயில் இறக்கிவிடுவதாக உறுதியளிக்கின்றனர்.
ஆனால், கார் சரியானதும் அந்த கஃபேவுக்குச் செல்லும்போது, அங்கு தனது மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடையும் அஜித், இறுதியில் தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடிக்கிறாரா என்பதே படத்தின் மீதிக்கதை.