’எங்க மக்கள மதிச்சு சந்திக்கனும்ல’.. மாஞ்சோலை மக்கள் ஸ்டாலின் மீது அதிருப்தி!
Author: Hariharasudhan7 February 2025, 4:57 pm
இரவில் இருந்தே காத்திருந்த தங்களை முதலமைச்சர் சந்திக்கவில்லை என மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி: அரசுமுறைப் பயணமாக, இரண்டு நாட்கள் நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வரை, இரண்டாம் நாளான இன்று (பிப்.07), மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையொட்டி, நேற்று இரவே பேருந்து நிலையத்துக்கு வந்த தொழிலாளர்கள், அங்கேயே காத்திருந்து, பின்னர் காலை ஏழு மணிக்கே, முதலமைச்சர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். ஆனால், 9 மணி வரை அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாஞ்சோலைத் தொழிலாளர்கள், விருந்தினர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பாளையங்கோட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் புறப்பட்டு வந்த நிலையில், விருந்தினர் மாளிகை வாசலில் மாஞ்சோலை தொழிலாளர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்கள் அங்கிருந்து எழ மறுத்ததால், அவர்களில் ஐந்து பேரை மட்டும் முதலமைச்சரைச் சந்திக்க அனுமதித்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு, எதையும் கேட்காமல் திருப்பி அனுப்பப்பட்டதால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
இதனிடையே, மாஞ்சோலை தொழிலாளர்களை சமாதானப்படுத்திய போலீசார், அவர்களை ஓரமாக நிற்க வைத்தனர். எனவே, முதலமைச்சர் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம் என தொழிலாளர்கள் காத்திருந்தனர். ஆனால், முதலமைச்சரின் கான்வாய் நிற்காமல் சென்றுவிட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், “எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த மூன்று மாதங்களாக பிபிடிசி நிர்வாகம் ஆலையை மூடிவிட்டதால், தேயிலை பறிக்கும் தொழில் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனால், உணவுக்குக் கூட வழியின்றி தவித்து வருகிறோம். நெல்லைக்கு முதலமைச்சர் வருவதை அறிந்து, அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். இதன்படி, முதலமைச்சரைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். அது மட்டுமல்லாமல், இன்று காலை 8.15 மணி முதல் 8.30 மணி வரை முதலமைச்சரைச் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக அனைத்து பேருந்துகளும் பொதுமக்களை அழைத்து வரச்சென்று விட்டதால், மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி இல்லாமல் போனது. எனவே, இரவிலேயே அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு நெல்லை பேருந்து நிலையம் வந்தோம்.
இதையும் படிங்க: 4 நாட்களில் தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவங்கள்.. ஸ்டாலினுக்கு எதிராக பாயும் கேள்விகள்!
அங்கும் தங்குவதற்குக் கூட இடமின்றி, கொசுக்கடியில் காத்திருந்து, காலையில் முதலமைச்சர் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தால், எங்களைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். அதன் பின்னணியில் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு உள்ளது. தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் எங்களைத் தடுத்து திருப்பி அனுப்புகிறார்கள்.
இதன் காரணமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனாலும் கூட, முதலமைச்சராவது எங்கள் கருத்தைக் கேட்டிருக்கலாம். அவரும் எங்களிடம் எதுவும் பேசாமல் சென்றது வருத்தம்தான். முதலமைச்சரைச் சந்தித்தால் எங்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் நல்ல தீர்வு ஏற்படும் என நம்பியிருந்தோம். இப்போது அந்தக் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது“” என்று” எனக் கூறியுள்ளனர்.