சீட்டுப் பணம் கேட்கச் சென்ற இளம்பெண்.. தாயாருக்கு தனி அறை.. ஜூஸால் நிகழ்ந்த விபரீதம்!
Author: Hariharasudhan8 February 2025, 2:52 pm
சீட்டுப் பணம் கேட்கச் சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர், தனது நிலத்தை விற்று, செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும், அல்தாப் தாசின் என்பவரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும், அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்துவிட்டு, ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டி உள்ளார்.
இதனிடையே, இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு 40 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர். எனவே, அந்த மீதி பணத்தை அந்தப் பெண் கேட்டபோது பணத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசினிடம் பெண் பணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது, பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். எனவே, இதற்காக வேலூர் வந்த அந்தப் பெண்ணிடம், பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்னை வரும் என்பதால் விடுதிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். இதன் பேரில், அந்தப் பெண்ணும், அவரது தாயாரும் விடுதிக்குச் சென்றுள்ளனர்.
ஜூஸில் குளிர்பானம்: பின்னர், அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல், பணத்தைக் கொடுக்க முடியாது என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும், இளம்பெண்ணின் தாயை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதேநேரம், இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈகோவால் INDIA கூட்டணிக்கு தொடர் பின்னடைவு.. திருமா சூசகம்!
பின்னர், அல்தாப் தாசின், மகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் அந்த பெண்ணிடம், உன்னை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாகவும் வீடியோ எடுத்து வைத்துள்ளோம் என்றும், இதனை வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் கூறி மிரட்டி உள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தப் பெண் கடந்த மாதம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.